வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

இழப்பு

அந்த பையன் இர்பான் இப்போது என்ன மனநிலையில் இருப்பான்?
ஒரு அம்மாவின் மன நிலையில் மனசு பதறுகிறது. ஹிந்தியில் குறைந்த
மார்க் ஒரு 15 வயசு சிறுவனின் வாழ்கையை புரட்டி போடமுடியுமா?
அவனுக்கு கோபம் அந்த டீச்சர் மீதா?
இப்போது அந்த பையனின் மன நிலை எப்படி இருக்கும்?
துடிக்க துடிக்க அந்த டீச்சர் சரிவதை கண் முன் பார்த்தது, அவனை சுற்றி
எல்லோரும் பதறியது, போலீஸ் வந்து பிடித்தது..இப்படி .
சாப்பிட, தூங்க முடியாமல் கண்களில் பயத்துடன்
இனிவரும் நாட்களில் வெறுப்புடன் மற்றவர்கள் பார்ப்பதை
சகித்துக்கொண்டு பாவம் அந்த குழந்தை என கண்ணீர் வருது.
அவனுக்கு பிடிக்காத அந்த பாடம் அவன் கனவுகளை கலைத்து போட்டுவிட்டது
என இனியாவது இந்த சமூக அமைப்பு புரிந்து கொள்ளுமா?
இது அவன் அப்பா அம்மாவிற்கு இனி புரிந்து அந்த பையனை மீட்க முடியுமா?
எதுவும் செய்ய முடியாமல் அந்த பையனின் கத்திக்கு இரையானது
உமாமகேஸ்வரி என்ற அந்த டீச்சர் அல்ல.
இர்பான் கண் முன் எதிரியாய் நின்றது
இன்றைய பள்ளிகளின் பாட அமைப்பும் தேர்வு முறையுமே.
பாட புத்தகங்கள் அந்த பையனை முட்டாள்
என முகத்தில் அறைந்துகொண்டே இருந்திருக்கிறது.
தனது புத்திசாலிதனத்தை நிருபிக்க முடியாமல்,
அவன் மனநிலையை பகிர்ந்துகொள்ளும்
சூழல் கிடைக்காததல் பொறுமை இழந்து,
அவன் கத்தியால் குத்தி கொன்று போட்டது
அந்த அப்பாவி டீச்சர் என்ற உருவத்தில் அவன் பார்த்த பாட அமைப்பை..
அந்த பையனை பார்த்து கைகளை பிடித்து
தலையை கோதி ஆறுதல் சொல்ல தோன்றுகிறது.
அவனின் அம்மா அப்பாவோ , பள்ளியோ
அவனுடன் நல்ல முறையில் பேசி
அவனின் புரிதலில் இருக்கும் கோளாறை சரி செய்ய மெனக்கிடிருந்தால்?
அதை செய்யாமல் விட்டது நம் தவறில்லையா?
ஆனால் அதற்கு அந்த டீச்சர் இன் குடும்பமும் ,
இர்பான் , அவன் குடும்பம் கொடுத்திருக்கும் விலை?
அந்த அம்மாவை உடனே பார்த்து
அவர்களின் குழந்தை குற்றம் செய்ய பிறக்கவில்லை..
புறசூழலுக்கு பலியாகிப்போனது,
டீச்சர் மட்டுமல்ல
இர்பானின் வாழ்க்கையும்
.
இதை உரத்து சொல்லவேண்டியது
நம் கடமை என மனம் பரபரக்கிறது.