செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வாழ்க்கை

புரியாத வயதில் புரிந்ததாய் நினைத்து
புரிந்த செயல்களின் விளைவுகள் புரியும் வயதில் புரியும்போது,
ஏன் அப்போதே புரியவில்லை என்று
அல்லாடுவதும்,
காண மறுத்ததை கண்ட பிறகு
மறுத்ததை நினைத்து மருகுவதும்,
சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டபிறகு
மனதில் இருப்பதை மறைக்கப் பாடுபடுவதும்,
தேடியது கிடைத்தும் தொட முடியாத தூரத்தில் இருப்பதும்.......
மனதில் நிற்பது கண்ணீராய் வழிந்து ஓடுவதும்
கண்முன் நிற்பது கண்ணீருக்கு காரணமாக இருப்பதும் ....
வாழ்க்கை எப்போதும் உடலை வருடி
கடந்து சென்ற தென்றலைப் போல
சுகமாகவும் இருக்கிறது
காண முடியாததால் சுமையாகவும் இருக்கிறது

அன்பு+நட்பு+நேசம்+தோழமை=...

அன்புடன், நேசமுடன்,பாசமுடன்,ப்ரியமுடன்,
தோழமையுடன்,சரியான புரிதலுடன்,
அளவான உரிமையுடன், அதிகமான தெளிவுடன்,
வாழ்த்தவேண்டிய தருணங்களில்
மிகையற்ற பாராட்டுதல்களையும் ,
கண்டிக்கவேண்டிய கணங்களில் கணக்கான கடுமையையும்,
அருகாமை தேவையான அவசர காலங்களில்,பண்புடன் கூடிய நேர்த்தியான கவனிப்பையும்,
இனிமையும், இதமுமாக
வாழ விழையும் பொழுதுகளில்,
மனதிற்கும் மனதிற்குமான இடைவெளிகள் ஏதுமின்றி,
பாசாங்கு இல்லாமல் பளிச்சென வெளிப்படுத்தி,
நட்பை, தோழமையை, காலத்திற்கும் கண்ணென மதித்து,
முரண்களால் முறிந்து விடாமல் தெளிவான
உணர்தலுடன் செழுமைபடுத்தி,
சிறப்பாக தொடரஎத்தனித்து,
இனிதிலும் இனிது, புதிதிலும் புதிதாக,
என்றென்றும் அன்புடன்...